Thursday, December 20, 2007

எனது ஊரைப்பற்றி.....

சேலத்திலிருந்து மேட்டூர் செல்லும் வழியில் மம்பட்டியான் வாழ்ந்ததாக கூறப்படும் மேச்சேரியில் இருந்து சுமார் 10 கி।மீ தொலைவிலும் மேட்டூருக்கு 10 கி।மீ தூரம் முன்பே உள்ள ஒரு சிற்றூர்தான் கந்தனூர்। முருகனை வழிபடும் கந்தன் கூட்டம் என்ற கூட்டத்து மக்கள் அதிகம் வாழும் பகுதி ஆதலால் கந்தனூர் என்று அழைக்கப்படுகிறது। அதாவது ஒரு குறிப்பிட்ட சாதியில் பல்வேறு உட்பிரிவுகள் உண்டு, அந்த உட்பிரிவுகளுக்குள்ளேயே பங்காளிகள் உண்டு இந்த பங்காளிகள் ஒரு கூட்டமாக ஒரு குறிப்பிட்ட தெய்வத்தை வழிபடுவார்கள், இவர்கள் மற்ற கூட்டம் அதாவது வேறு குலதெய்வத்தை வழிபடும் கூட்டத்தில்தான் பெண் எடுப்பார்கள் ஆனால் சாதி இனம் எல்லாம் ஒன்றேதான். இது பெண் எடுக்கும் முறைக்காக நடைமுறைபடுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஆனால் அனைவரும் அனைத்து கடவுளரையும் வணங்குகிறார்கள், குலதெய்வம் தான் வெவ்வேறாக உள்ளது. இது அனைத்து சாதியிலுமே உள்ளது. இந்த கந்தனூர் பேருந்து நிறுத்தத்தில் இறங்கினால் எதிரெதிரே இரண்டு பெட்டிகடைகள் இருந்தது போய் இப்போது மளிகை கடைகள் வந்துவிட்டதை நீங்கள் தெரிந்துகொள்ளலாம். நிறுத்திலேயே புளியமரத்தடியில் ஒரு சவரக்கடை, வயதானவர்கள் ஏழை எளியவர்கள் மட்டுமே இந்த கடையை பயன்படுத்துகிறார்கள்.

கிராமத்தில் உள்ள தோட்டத்து வீடு.....

சாலையை கடந்து எதிரே உள்ள புளியமரத்தை தொட்டாற்போல் உள்ள வீட்டை ஒட்டி வடக்கு நோக்கி செல்லும் ஒத்தையடி பாதையில் சென்றால் ஒரு வயல்வெளி பச்சை கம்பளம் விரித்து உங்களை வரவேற்கும், இடையிடையே வயலில் உள்ள தெண்ணைமரங்கள் உங்கள் மணதை கொள்ளைகொள்ளும், சமயத்தில் வாய்க்காலில் தண்ணீர் பாய்ந்து வரும் வேளையில் கால்களை நனைத்துக்கொண்டு ஒரு சிறு பிள்ளைப்போல் விளையாட தோன்றும், வயலைக்கடந்தால் நின்றால் சற்று பள்ளமான பகுதியில் பாறைகளாலான பாதை தெரியும், நட்டு வைக்கப்பட்ட பருத்த இடுப்பளவு உயரமுள்ள ஒரு ஜோடி பாறங்கல்லின் இடையே புகுந்து செல்லும்போது உங்கள் ஆரோக்கியத்தையும் இடையின் அளவையும் கணக்கெடுத்துவிடலாம், பாறையாலான படிகல்லை தாண்டினால் ஆளறமற்ற ஒரு ஒற்றை கூரைவீடு ஒரு கிழவன் கிழவி கோலூண்றி வாழ்ந்த கதையை சொல்லும், வீட்டிற்கு பின்புறம் நிலமட்டத்தின் கீழ் ஒரு வரண்ட கிணற்றை எட்டி ஏளனமாக பார்த்தால் வாராது வந்த விருந்தாளியிடம் நானும் ஒரு காலத்தில் சுரந்தவள் தான் என்று உள்ளிருந்து மௌனமாய் பேசும், கிண்ற்றை தொட்டு நடந்தால் வானளாவ வளர்ந்த பணைமரங்களின் கீழே பலர் காத்துக்கிடந்து கருவாடு வறுத்து கள்குடித்த வாசத்தை மீண்டும் வரவழைக்கும்। நேர்வழியில் வரும் பெரிய மண்தடம் தாட்டினால் நீங்கள் வேண்டாமென்றாலும் கண்களை கவரும் வெளிர் ஊதா(பிங்க) நிற வீடு அகல திறந்த வெள்ச்சுவரின் கதவுகள் உங்களை வரவேற்கும், பரந்த வாசல், பசும்புல் தரையுடன் ஒரு சிறிய பூங்கா, வீட்டை தாண்டி வந்து அழைக்கும் மாந்தோட்டம், அந்த மாந்தோட்டத்தின் மண்ணிலிருந்தும் என்னை அடையாளம் கண்டுகொள்ளும் என் தாய்.

பெற்றோர் குடும்ப பின்னனி............

கந்தனூர் சுமார் 200 குடும்பங்கள் வாழும் பகுதி। சுமார் 11 ஆண்டுகளுக்கு முன் மறைந்துவிட்ட எமது தாத்தா பொன்னுசாமி, ஒரு தனியார் தொழிற்சாலையில்(தற்போது கெம்ப்லாஸ்ட் சன்மார்) பணியாற்றினாலும் ஒரு விவசாயி। தன் தந்தை வாங்கிய கடனுக்காக சுமார் 20 ஆண்டுகள் பண்ணையில் வேலை செய்திருக்கிறார். கடவுள் நம்பிக்கையும், அதீத மூடநம்பிக்கையை கொண்டது மட்டுமல்லாமல் கோயில் நிர்வாகத்தை நடத்தும் பொறுப்பாளர்களாகவும் இருந்த, இருக்கின்ற குடும்பம், படிப்பின் வாசனையே அறியாதவர்கள். வீட்டில் மூன்றாவது பிள்ளையாகவும், இரண்டாவது மகனாகவும் பிறந்த எமது தந்தை கடின உழைப்பளியாகவும் குடும்பத்தில் பொறுப்புமிக்கவராக விளங்கியிருக்கிறார். வீட்டின் மூத்த மகன் அன்றைய நாளில் உலக அளவில் புகழ்பெற்ற மேட்டூர் மில்ஸ் வேலையில் இருந்ததால் எமது தந்தைக்கு வாரிசு வேலையை கொடுத்துள்ளனர். எம் தாயாரின் தாத்தா வெள்ளையர் காலத்தில் மின்சார வாரிய ஊழியராக பணியாற்றியதில் எங்கள் ஊரிலிருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் உள்ள கூளையூர்(தற்போது அண்ணா பல்கலைகழத்தின் துனைவேந்தரின் வீட்டை ஒட்டிய வீடு இன்றும் இருக்கிறது, துனைவேந்தரின் தாயாரும் எனது பாட்டியும் அண்ணன் தம்பி மகள்கள்) என்ற கிராமத்திலிருந்து தருமபுரி மாவட்டத்திலுள்ள பொம்மிடி என்ற ஊருக்கு மின் கம்பம் இழுத்துச் சென்றவர்கள் அங்கேயே நிலங்கள் வாங்கி குடியேறியிருந்தார்கள். எனது தாயார் வீட்டின் இரண்டாவது பிள்ளை இரண்டாவது மகள். எனது தாய் வழி தாத்தா பொம்மிடியில் கசாப்பு கடையும் மளிகை கடையும் வைத்திருந்தவர், தற்போது தன் மூன்று மகன்களுக்கும் தன் உழைப்பில் சேர்த்த 50 ஏக்கர் நிலத்தை பிரித்துகொடுத்துவிட்டு தண்ணீர் இருந்தும் பாடுபட ஆள் இல்லை என வருத்தத்துடன் வாழ்ந்துகொண்டிருக்கிறார்.அதோடு உறவிலேயே பெண் பார்த்து எமது தாயாரை திருமணம் செய்திருக்கிறார்கள்.

பங்காளிச்சண்டை............

கூட்டுக்குடும்ப வாழ்க்கை அதிக நாள் நீடிக்கவில்லை। தான் வாங்கும் சம்பளத்தை கவரை உடைக்காமல் தந்தையிடம் கொடுத்துவிட்டு சுமார் 6 கி.மீ தூரம் நடந்தே மூன்று வேளை ஷிப்டுகளில் வேலை பார்த்து போணஸ் பணத்தை முழுமையாக கொடுத்துவிட்ட பின்பும் தலை தீபாவளிக்கு புது துணி எடுக்க பணம் கொடுக்கவில்லை என்பதுதான் விவகாரம். ஆறு மாத சம்பளம் ஏற்கனவே முழுமையாகவும் போணஸ் பணமும் கொடுத்துவிட்ட பின் வாரிசு வேலைக்கென பத்தாயிரம் கொடுத்துவிட்டுதோடு தன் தாத்தா நினைவாக கொடுத்த ஒரு சொம்பு, சாப்பிடும் தட்டு, ஒரு சேவல், ஒரு ஜோடி தோடு, தாலியையும் கழற்றி கொடுத்துவிட்டு தனிக்குடித்தனம் வந்துள்ளனர்.வாரிசு வேலைக்கு சேர்ந்ததற்காக பணம் பத்தாயிரம் பெற்றுக்கொண்டு காட்டை பாகம் பிரித்து கொடுப்பதாக பஞ்சாயத்தில் முடிவு செய்யப்பட்டது. பேசியபடி என் தந்தை பணம் பத்தாயிரம் கொடுத்த பிண்பு பாகம் பிரித்து கொடுக்கமால் அண்ணன் தம்பிகள் மூவர் சேர்ந்து துடப்பத்தால் மூக்கை உடைத்துள்ளார்கள். குடிக்க தண்ணீர் எடுக்க சென்ற என் தாயை "ஏய் பிள்ளை இங்கெல்லாம் தண்ணி எடுக்ககூடாது" என்று தடுத்திருக்கிறார் என் தாத்தா. அடுப்பில் சொறும் பருப்பும் வெந்து கொண்டிருக்கும் போதே வீட்டை பூட்டி சாவியையும் எடுத்து சென்ற என் தாத்தாவிற்கு எங்கள் வீட்டிலேயே பல நாட்கள் கோழியும், மீனும் செய்து போட்டிருக்கிறோம்.

பிறப்பு...........

மண் சுவர், தெண்ணங்கீற்றால் வேயப்பட்ட குடிசையில் குடிப்புகுந்தனர்। குடும்பத்தாரால் நிம்மதி நீடிக்கவில்லை என்றாலும் சிரமத்திலேயே காலத்தை நகர்த்தினர். முதல் பிள்ளை என்பதாலோ என்னவோ நான் பிறந்தது மேட்டூர் அரசு மருத்துவமணையில். அடுத்தடுத்து 4 பெண் குழந்தைகள் இரண்டு பெண் சிசுக்கள் என் பெரியம்மாள் கல்லிப்பால் கொடுத்துக் கொல்லப்பட்டதை தடுக்கும் வயது எனக்கில்லை அப்போது எனக்கு நன்றாக நினைவிருக்கிறது நான் அந்த பிஞ்சுகளை கொல்லவிடாமல் அழுததும், ஆனால் அதை பொருட்படுத்தாமல் கொலை செய்த பாதகமும் நான் இன்றும் வேதனையோடு சில நேரங்களில் நினைத்துக்கொள்வது உண்டு. இப்போது அந்த பிஞ்சுகளை யார் யார் என்ன சடங்குகள் செய்து எங்கு புதைத்தார்கள் என்பது என் நெஞ்சில் நிழலாடுகிறது.

குழந்தைப்பருவம்.........

இந்த வீடு எதோ பெருமையாக இருந்தாலும் நான் மண்ணில் விளையாடிய போது இருந்த கூரை வீடு, அவசரமாய் நான் அரைக்கால் சட்டையை கழற்றிவிட்டு ஒடி முக்கிகொண்டு உட்கார்ந்த வெளிக்காடு இப்போது இல்லாதது மீண்டும் ஒருமுறை அந்த கவலையறியாத வாழ்வு வாராத என்ற ஏக்கம் தேங்குகிறது। குடியிருந்த குடிசை, வலதுபுறமாய் ஒரு பலகைகல்லின் மீது நிறுத்தி என்னை குளிக்க வைத்தது, அருகிலேயே இருந்த பப்பாளி மரம், இரவில் பயமுறுத்தும் அவரை புதர், வீட்டின் இடதுபுறம் இருந்து மாட்டுக்கூரை, அருக்கிலேயே எருக்குழி, மாட்டுசாணியை அள்ளி தூக்கமுடியாமல் புட்டியை பின்னாலேயே இழுத்துக் கொண்டுபோய் எருக்குழியில் தள்ளிவிட்டு அதிலேயே குதித்து புட்டியை மீண்டும் எடுத்து வந்தது, நெல்லம்பில் குத்தாரியிலிருந்து தொங்கி தொங்கி மாட்டுக்கு தீனி இழுத்துபோட்டது. தவிட்டை தாழியில் கொட்டி மாட்டைபிடித்துக் கொண்டு தண்ணீர் காட்டியது, பந்தை உயர தூக்கி போட்டு பிடிக்கும் போது பந்தில் கவனமாய் காட்டில் வலது ஓரமாய் இருந்த பணங்கட்டையில் காலை கிழித்துக்கொண்டு இரத்தம் கொட்டியது எல்லாம் போய் இப்போது தோட்டமாகிவிட்டது. முன்பு போல் யார் வீட்டிலும் பிள்ளைகள் கோலி விளையாடுவதில்லை, எல்லாம் டி.வி தான்.

ராமு........

இந்த இடத்தில் நிச்சயமாக நான் பிள்ளை பருவத்தில் பாசத்தோடு பழகிய நாய் ராமுவை நினைவு கூறுகிறேன்। நாயின் விசுவாசம் கூட மனிதர்களிடம் இல்லை என்பது உண்மை என்பதை நாம் பல நேரங்களில் காண்கிறோம். ஆனால் எங்களில் ஒன்றாக வாழ்ந்த ராமுவை நான் சாகும் நாளில் கூட மறக்கமாட்டேன். என்னருகே யார் இல்லாவிட்டாலும் ராமு இருப்பான், எங்கள் வீட்டு மாட்டுக்கட்டாந்தரையில் யாரும் சானியைக்கூட தொட முடியாது. என் பெற்றோரை தவிர யாரும் என்னை தொட்டுவிடமுடியாது. எங்கள் வீட்டிற்கு யார் வருவதாக இருந்தாலும் வீட்டிலிருந்து சுமார் 200 அடி தூரத்தில் இருந்தே குரல் கொடுக்கவேண்டும், ராமு பழக்கப்படுத்தப்பட்டவன் அல்ல. அவன் தானாக விசுவாசத்துடன் வாழ்ந்தவன். நான் பள்ளிக்கு செல்லும் போதெல்லாம் அவன் செய்த பிரச்சனைகள் நீங்கள் கேட்டிருக்ககூட வாய்பில்லை, நான் ஏறும் அரசுப்பேருந்தில் ஏறிக்கொண்டு தினமும் அவன் செய்யும் தொல்லை, பல நாட்கள் அவனை இறங்கவைக்க என்னையே இறக்கிவிட்டு போய்விட்டார்கள். எங்களால் தினமும் இந்த பிரச்சனை என்று நடத்துனரிடம் சலிப்பு, நான் வீடு திரும்பும் நேரம் எனக்காக பேருந்து நிறுத்தத்தில் காத்திருப்பான், பல வருடம் கானாமல் இருந்த காதலியை பார்த்ததுபோல் அவன் செய்யும் அட்டகாசம் இருக்கிறதே, அதற்காக நான் மீண்டும் பிள்ளையாய் பிறக்கவேண்டும், அவனும் அதே குடிசையில் மீண்டும் வேண்டும். ஒரு நாள் பேருந்து போய்விட பள்ளிக்கு நேரமானதால் உறவினர் ஒருவருடன் சைக்கிளில் அனுப்பினார்கள் சைக்கிளுடனே பள்ளிக்கு வந்துவிட்ட ராமுவை வெளியே விட்டு பள்ளிக்கூட கேட்டை மூட காவலாளி பட்ட சிரமம் இருக்கிறதே அது கொடுமை, அதைவிட கொடுமை வகுப்பில் அமர்ந்துகொண்டு ராமு வீட்டிற்கு போயிருப்பானா, இல்லை வெளியிலேயே காத்திருக்கிறானா, ஒருவேளை வீட்டிற்கு போகும் வழியில் அவனுக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்ற கவலைதான் எனக்கு பெருங்கவலையாக இருந்தது. மாலை வரை காத்திருந்த ராமுவையும் என்னையும் என் தந்தை வந்து அழைத்து சென்றார். ஒருமுறை தாய்வழி தாத்தா வீட்டிற்கு நாங்கள் சென்றிருக்க உடனே ஊர் திரும்பமுடியாத அளவு மழை, மூண்று நாட்கள் கழித்து வீடு திரும்பும் போது பாதி வழியிலேயே தெரிந்துவிட்டது மேற்கூரை கானவில்லை என்பது, போட்டு வைத்த பண்டம் பாத்திரம் அனைத்தும் அப்படியே இருக்க ராமு பக்கத்திலேயே இருந்தான், கூரை எப்போது கானாமல் போனதோ தெரியவில்லை. மனிதன் இருந்திருந்தால் கூட தனக்கு பாதுகாப்பு தேடி போயிருப்பான். என்னை அன்போடு கொஞ்ச என்னை தூக்க முற்பட்ட என் சித்தப்பாவின் கண்ணத்திலிருந்த கறியை பிடுங்கிவிட்டான் ராமு. என்னை பார்க்கும் போதெல்லாம் இப்போதும் அவர்கள் நினைவில் வருபவன் ராமு. இப்படி எங்களை பகை நிழலாய் தொடர்ந்த காலத்தில் எங்களுக்கு அரனாய் இருந்த ராமுவிற்கு அப்படி ஒன்றும் வயதாகிவிடவில்லை, ஆனால் என்ன காரணமோ தெரியவில்லை, அதிகமாக எச்சில் ஊற்ற ஆரம்பித்தவனை எந்த மருந்தாலும் காப்பாற்ற முடியவில்லை, அவன் ஒரு மதிய நேரம் மரணமடைந்ததை என் கண்ணிலேயே பார்க்கும்படியாகிவிட்டது. என் தாயை இழந்த போது எனக்கு 26 வயது, ஆனால் சிறு பிள்ளையாய் இருந்த போது ராமுவை இழந்து அந்த இழப்பை யாரிடம் சொல்லி அழுவது என்று தெரியாமல் நான் பல நாள் தனியாகவும் இரவிலும் அழுது, பேருந்துக்காக நடக்கும் தனிமையான நேரங்கள் என்னை மிகவும் வருத்தியது, இந்த துயரம் தனிய நீண்ட காலம் ஆனது. இப்படி சொல்லாமல் எனக்குள் புதைக்கப்பட்ட பாசத்தின் பிரிவு, அந்த பிரிவின் துயரம் ஒரு மென்மையின் மீதும் ஒரு மனிதநேயத்தின் மீதும் எனக்கு நீங்காத காதலை ஏற்படுத்திவிட்டது என்ற எண்ணம் எனக்குள் பல நேரங்களில் எழுந்துள்ளது. பிஞ்சு உள்ளத்தில் விதைக்கப்பட்ட ராமுவின் பாசம் உயிரின் மதிப்பை உணர்த்தியிருக்கிறது. ராமு புதைக்கப்பட்ட இடத்தை இப்போதும் அவ்வப்போது சென்று பார்ப்பது நான் இழந்துவிட்ட குழந்தை பருவத்தையும், அப்போது இருந்த உண்மைக்கும், இப்போது வாழும் வாழ்க்கைக்கும் எவ்வளவோ வேறுபாடுகள், நான் முற்றிலுமாக அந்த மண்ணிலிருந்து அந்நியப்பட்டுவிட்ட ஏமாற்றம் என்னை குத்துகிறது. கிணற்றில் இருந்து நீரை முகண்டு வரும் பறியிலிருந்து வாய்க்காலில் நீர் கொட்டும்போது அரப்பு தலையை வாய்க்காலில் வைப்பது அப்போது மூக்கில் புரை ஏறியது, வாய்க்கால் நீரில் கவிழ்ந்து படுத்துக்கொண்டு நீர் என் மீது தவழ்ந்து சென்றதை ரசித்து விளையாடியது, இந்த ஏக்கத்தை தீர்க்க ஒவ்வொரு முறையும் அந்த கிணற்றை எட்டி பார்த்துகொண்டு நிற்பதை தவிர இப்போது வேறேதும் செய்யமுடியாது, இப்போது மோட்டர் கிணறாகிவிட்டது. இப்படி எவ்வளவோ கிராமத்து வாழ்க்கையில் சொல்லலாம், ஒரு கள்ளிக்காட்டு இதிகாசத்தை போலவோ அல்லது கருவாச்சி காவியத்தை போலவோ கடினமான பாதையில் நான் பயணிக்காவிட்டாலும், ஒரு கிராமத்து வாசத்தில் வாழ்ந்தவன் அந்த வாழ்க்கையை அனுபவித்தவன் என்பதில் எனக்கோர் பெருமையிருப்பது மட்டுமல்லாமல் பொதுவாக கிராம மக்களுக்காக குரல் கொடுக்கும் கடமையும் எனக்கு உள்ளது.

கல்வி........

பொதுவாக பாதிக்கப்பட்டவர்கள் மிக விரைவாக முன்னுக்கு வருவதில் முனைப்பு காட்டுவார்கள், அப்படித்தான் என் தந்தையும் தான் கல்வி கற்காத காரணத்தால் என்னை ஆங்கில வழியில் படிக்கவைத்தனர்। ஆனால் கல்வியை தவிர நான் ஒரு சராசரி குழந்தைகளைப்போல விளையாடவோ பொழுதுபோக்கவோ அனுமதிக்கப்படவில்லை। விவரமறிந்த நாள் முதல் கல்லூரியில் கால் வைத்த பிறகும் அவ்வப்போது மாடு மேய்ப்பது, காட்டு வேலைகளை செய்வது, என ஓயாமல் ஏதாவது வேலையில் என்னை ஈடுபடுத்திக்கொண்டிருக்கிறேன். ஆறேழு மாடுகள் என்றிருந்த காலத்தில் நாங்கள் சிறு பிள்ளைகள், எங்களை பள்ளிக்கு அனுப்பவேண்டும், மாடுகளுக்கு தண்ணீர் எடுக்கவேண்டும், தீவணம் போடவேண்டும், வீட்டை கவனிக்கவேண்டும், சமைக்கவேண்டும், காட்டில் வேலை செய்யவேண்டும், பால் கறக்கவேண்டும், இப்படி மாடாய் உழைத்தவள் என் தாய், 16 வயதில் கல்யாணமாகி 44 வயதில் 6 பிள்ளைகளை பெற்று 4 பிள்ளைகளை வளர்த்து, ஒரு மகனை முழுமையாய் ஆளாக்கி பார்த்ததோடு சரி, யாருக்கும் அப்போது திருமணமாகியிருக்கவில்லை, யாரும் என் தாயார் இப்படி ஒரு நோயால் இறந்து போவாள் என நினைக்கவில்லை. ஒரு குடும்பத்தில் எவ்வளவு வளர்ந்த பிள்ளைகளாய் இருந்தாலும் தாய் என்பவள் இல்லையேல் எவ்வள்வு பெரிய இழப்பு என்பது எல்லோரும் அறிந்திருக்க வாய்ப்பு இல்லை. அதுவும் இரண்டு கல்யாண வயது பெண்கள் இருக்கும் போது. இன்றும் என் தாயிருந்தால் இந்த சூழ்நிலையில் என்ன எடுப்பாள் என்று ஒருமுறை யோசித்து பார்த்துவிட்டுதான் எந்த முடிவிற்கு வருகிறேன். எல்லோரும் கலந்தாலோசித்து முடிவெடுத்த வந்தோம், இன்று அதில் ஒரு ஜீவன் இல்லை. பள்ளிக்கூடத்தில் படிப்பை தவிர மற்ற விசயங்களில் என்னை எந்த அளவு ஊக்குவிக்கவேண்டும் என்றெல்லாம் என் பெற்றோர் எப்போதாவது நினைத்தார்களா தெரியவில்லை. ஆனால் பொய் சொல்வது என் தந்தைக்கு முற்றிலும் பிடிக்காத விசயம். ஆனால் அவர் இப்போதெல்லாம் நிறைய பேசுகிறார். நானாக விரும்பி ஏதாவது கேட்டால் காரண காரியங்களை தெரிந்துகொண்டு வாங்கி கொடுப்பார்கள். தின்பண்டங்களுக்கு குறை வைப்பதில்லை. ஆனால் கடைத்தெருவில தின்ன அனுமதியில்லை, வாங்கி வந்து வீட்டில் தான் சாப்பிட வேண்டும் என்ற ஒழுக்கத்துடன் வளர்க்கப்பட்டேன். நாண்காம் வகுப்பில் ஹிந்தியை ஒரு பாடமாக எடுத்து படித்தேன் 1986ம் ஆண்டு என்றால் நீங்கள் நம்பமாட்டீர்கள், அதுமட்டுமல்லாமல் அப்போதே பிராத்மிக் என்ற தேர்வையும் எழுதி முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றேன். அப்போதெல்லாம் தமிழ் பற்று என்பதெல்லாம் என் சிந்தனையில் இல்லை. ஆனால் தமிழாசிரியைகளின் மீது மரியாதையையும் பற்றும் இருந்தது, காரணம் அவர்களின் அன்பும் அரவனைப்பும் இருந்தது. தமிழ்செல்வி, அலமேலு மங்கை, நிர்மலா, என தமிழாசிரியைகள் என் தலையை யார் வாரிவிட்டார்கள் என்று கேட்பதில் இருந்து, நகசுத்தி வந்த போது அக்கறையாய் விரலைபிடித்து மெதுவாய் எழுத பழக்கியவர்கள் தமிழாசிரியைகள் தான். இன்றும் தலைமுடியெல்லாம் வெள்ளையாகி போய்விட்ட தமிழ்செல்வி ஆசிரியை நான் பார்க்காவிட்டாலும் என்னை கண்டு நலம் விசாரிப்பது ஒரு தாயாய் எங்களிடம் அன்பு பாராட்டிய இந்த நல்ல உள்ளங்களுக்கு நாம் என்ன செய்தோம் என்ற கேள்வி எழுகிறது.

சிந்தனை..................

மேட்டூரில் உள்ள செயிண்ட் மேரிஸ் பள்ளியில் எல்।கே.ஜி பதினைந்து நாள் படித்த நான் விடுபிள்ள எங்கப்பாகிட்ட போறேன்னு அங்கியணிந்த சிஸ்டர்களை சிறுபிள்ளைகள் என நினைத்து பேசியது இப்போதும் சொல்லி சிரித்துகொள்ளும் வேடிக்கையாகிவிட்டது. 15 நாளில் சிஸ்டர்கள்டமிருந்து விடுதலை பெற்றாளும் ஏதோ காரணத்தால் அந்த பிஞ்சு உள்ளத்தில் அவர்களை சிரமப்படுத்துகிறோமோ என்ற கவலையுடனும் மீண்டும் இந்த பள்ளிக்கு வரப்போவதுமில்லை இந்த வெள்ளை தேவதைகளோடு முழு பலத்துடன் சண்டை போடப்போவதுமில்லை என்று ஒருவித பயம் கலந்த விடுதலையுடன் சற்று அருகாமையில் உள்ள ஆங்கிலப்பள்ளியில் சேர்க்கப்பட்டேன். அங்கே நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது நடமாடும் புத்தக கடையுடன் வந்த ஒரு இராமன் பிரச்சாரக் கூட்டம் மூன்று நாட்கள் அங்கே அடித்த கொட்டம் அப்போதே எனக்கு பிடித்திருக்கவில்லை. எதோ ஒரு இல்லாத கருமத்தை சொல்லி நம்மை ஏமாற்றுகிறார்கள் என்ற எண்ணம் என் நெஞ்சில் பல கேள்விகளோடு கூட்டத்தில் கோவிந்தா போட்டுக்கொண்டிருந்தேன். பின் சில நாள் வீட்டில் இருந்த உண்டியல் காசை திருடி மாட்டிக்கொண்டேன், இதற்கு ஆரம்பத்தில் உண்டியல் காசை எடுத்தால் சாமி கண்ணை குத்திவிடும் என்ற மிரட்டல் வந்ததுதான் நான் நாத்திகனானதற்கு முதல் காரணம். நான் தொடர்ந்து உண்டியல் காசை திருடியதும், சாமி கண்ணை குத்தாமல் போனதும் இருப்பினும் என் இரவு தூக்கம் போனதும், பின் இனி சாமி காலம் கடந்து கண்ணை குத்த வாய்ப்பில்லை என்ற முடிவிற்கு வந்தவனிடம் சாமியே இருக்க வாய்ப்பில்லை என்ற எண்ணம் தலைதூக்கியது. எங்கள் காட்டுக்கு அருகே உள்ள மாதேஸ்வரன் கோவில் ஒன்றில் பொங்கல் பண்டிகையின் போது சீரியல் அலங்காரம் செய்து காளைகளை விரட்டி ஜல்லிக்கட்டு நடத்துவார்கள், அன்று மட்டும் அந்த கோயிலில் படையல் வைத்து கும்பிடுவதும் பூசாரி ஒரு பழத்தையும், அரைமூடி தேங்காயையும் எடுத்துக்கொள்வது எனக்குள் கடுங்கோபத்தை ஏற்படுத்தியது எதற்காக இவன் நம் தேங்காயையும் பழத்தையும் எடுக்கிறான் என்ற கேள்விக்கு சாமிக்கு என்று என் தந்தை கூறினார். சாமியோ கல், இன்று தவிர வருடமுழுவதும் கேட்பாரற்று கிடக்கும் இந்த கல் எப்படி தின்னும் என்ற கேள்வியுடன் அடுத்த நாள் கோயிலுக்கு சென்று பார்த்தால் பழம் தேங்காய் எல்லாம் கானவில்லை, எனினும் இது பூசாரி வீட்டிற்கு போய்விட்டது என்பதை அறிந்துகொண்டேன். மேலும் இந்த காளைகளை கோயிலை சுற்றி விரட்டுவதும் மக்கள் தெரித்து ஓடுவதும் ஒரு விதமான் எரிச்சலையும் பயத்தையும் ஏற்படுத்தியது. இதுவே நாளடைவில் கடவுள் மறுப்பாக மாற காரணமாகியது.

பெற்றோர் பாசம்................

நாண்காம் வகுப்பு படிக்கும் போது கிராமத்தில் அடுப்பு எரியாமல் புகைய அம்மாவிற்கு உதவியா இருக்குமே என மாடு கழித்துவிட்ட சருகுகளை எடுக்க போனவன் கீழே விழுந்து கையை முறித்துக்கொண்டேன், கை முறிந்துவிட்டது என்பதை எப்படி சொல்வது என்று புரியாமல் விழித்தேன்। நேரமோ இரவு எட்டு மணி படித்துக்கொண்டிருந்தவனுக்கு பச்சை விற்கால் அடுப்பு எரியாமல் புகைவதும் அம்மாவின் புலம்பல் பொருக்காமலும் தான் சருகு பொருக்கப்போனேன், ஆனால் இருட்டில் பயந்து ஓடிவந்து விழுந்து இந்த நிலைமை। ஆனால் மனதளராமல் வலதுகையால் ஒடிந்த இடதுகையை பிடித்துக்கொண்டே போய் வாசலில் நின்று "அம்மா கை ஒடிஞ்சு போச்சு என்றேன்" என்னடா ராசா சொல்ற என்று கத்திகொண்டு ஓடிவந்தவளிடம் பயத்தில் வாய் குழறியபடியே சொன்னேன், ஏதோ உயிரே போய்விட்டது போல் அடித்துக்கொண்டது அழுததை பார்க்கும்போது எனக்கு இருந்த நம்பிக்கையும் போய்விட்டது। இங்கே அன்னையின் அழுகுரலால் நொடி நேரத்தில் பெரும் கூட்டமே கூடிவிட்டது. உடனே என்னை அள்ளிக்கொண்டு அந்த இரவு நேரம் மக்கள் வரிசையாய் அழுதபடியே ஒற்றையடி பாதையில் நடக்க, எனக்கு நம்மால் இவ்வளவு பெரிய துன்பம் வந்துவிட்டதே இத்தனை பேருக்கும் என்ற குற்ற உணர்வு. கூடவே வெளியே ஏதோ வேலையாய் போன என் தந்தையின் ரியாக்ஷன் எப்படி இருக்குமோ என்ற கவலை. எங்கோ இருந்தவருக்கு தகவல் கிடைத்து அலறியடித்து ஓடிவந்து கட்டிக்கொண்டு அழுதவரை கூடியிருந்தவர்கள் தேற்ற நேரமாகிவிட்டது. உடனே அப்போது டாக்சி என்றால் பெரிய விசயம், டாக்சி பிடித்து வருவதற்குள் நான் தூங்கிவிட்டேன். டாக்சியுடன் வந்து என்னை அரை தூக்கத்தில் அள்ளி பின் சீட்டில் படுக்கவைத்துக்கொண்டு நல்லாம்பட்டியை நோக்கி வேகம் பிடித்தது மகிழுந்து. நல்லாம்பட்டியை அடைந்தபோது நள்ளிரவு 2 மணி. மான் தோள் மீது படுத்திருந்த பெரியவர், தருமபுரி தமிழில் பேசிக்கொண்டே என்னை அருகில் அமரவைத்துக்கொண்டு கையை பிடித்து ஆட்டிப்பார்த்தார். பின்னர் பயப்படவேண்டாம் ஒன்னுமில்ல எளம்பிஞ்சு கை நாலுகட்டுல கை வித்தியாசம் தெரியாம கூடிடும் என்றார். அவர் நல்ல போதையில் இருந்தார், எனினும் அனுபவம், அவரது பார்வை, மிக எளிதாக பாதிப்பை கண்டறியும் விதம், என்னை தன்னருகிலேயே படுத்துகொள்ள சொன்னார். ஆனால் எங்களுக்கு தனி படுக்கை கொடுக்கப்பட்டது. கால் ஒடிந்தவர்கள், கை ஒடிந்தவர்கள், நெஞ்செலும்பு ஒடிந்தவர்கள் என சுமார் 30 பேருக்குமேல் அங்கேயே தங்கி சிகிச்சை பெறுகின்றனர். நடக்கமுடியாதவர்களின் கழிவுகளை எடுக்கும் பெட்பேன் போன்றவையிலிருந்து வரும் நாற்றம் மற்றும் வலி துளியும் தூங்கவிடவில்லை. விடிந்ததும் கையை அதன் பழைய இடத்தில் பொருத்தி நீட்டி மடக்குகிறார்களே அப்போது ஏற்படும் வலி இருக்கிறதே அதற்கு எந்த ஊசியும் போடுவதில்லை. எனக்கென்னவோ அப்போது பார்க்கும்போது மனிதநேயம் உள்ளவர்களாக தெரியவில்லை. பச்சையிலை, முட்டையின் வெள்ளைக்கரு, மஞ்சள் இவற்றை கொண்டு கட்டு போடுகிறார்களே என்ன ஒரு அனுபவம், ஒருவனின் உயிர்வலியோடு விளையாடுகிறார்கள். எந்த கட்டணமும் இந்த வைத்தியத்திற்காக அவர்கள் வாங்குவதில்லை என்பதை அறிந்தால் நீங்கள் வியந்துதான் போவீர்கள். ஆம், ஒரு உண்டியல் வைத்து இருக்கிறார்கள் அந்த உண்டியலில் விரும்பினால், முடிந்தால், காசு போடலாம். இன்றும் அந்த நல்லாம்பட்டி இயற்கை எலும்பு முறிவு மருத்துவமனைக்கு ஈடு இனை உலகில் இல்லை என்று என்னால் தீர்க்கமாக கூறமுடியும். ஒரு டாக்டரால் முடியாத சிகிச்சையை எந்த அறுவை சிகிச்சையும் இன்றி இவர்க்ள் செய்யும் சிகிச்சையால் பயனடைந்தவர்கள் கோடிக்கணக்கில் இருக்கலாம், இதை இவர்கள் ஐந்து தலைமுறையாக செய்துவருகிறார்கள்.


விபத்துகள்..............

மாலை நேரம் பள்ளியைவிட்டு வந்துகொண்டிருந்தோம் அப்போது நான் மூன்றாம் வகுப்புதான் படிப்பேன் என்று நினைக்கிறேன், அந்த பேருந்து நிறுத்தம் இரண்டு பாதைகள் ஒன்றாய் செருமிடம், நான் ஒரு பாதையில் வந்து மறுபாதையில் செல்லவேண்டியவன். நான் பேருந்து நிறுத்தத்தை நெருங்க நெருங்க எங்கள் பேருந்து வந்துவிட்டது அவசர அவசரமாக புத்தக மூட்டையை தூக்கிகொண்டு ஓடிவந்தவன் தடுக்கி தனலட்சுமி என்ற பேருந்தின் நடுவண்டிக்கு அடியில் போய்விழுந்துவிட்டேன். எதிரில் இருந்த பொரிக்கடைக்கார அத்தை கத்தியதில் பேருந்து நின்றுவிட்டது இல்லாவிட்டால் சட்டினி ஆகியிருப்பேன் அன்றே. பிறகொருமுறை 8ம் வகுப்பு படிக்கும்போது மாலை 5.15 மனிக்கு மன்ணெண்னை இல்லை எப்படி சமைப்பது என்ற விவாதம் ஓடிக்கொண்டிருக்க உடனே நான் இதோ வந்துவிடுகிறேன் என்று மன்ணெண்னை கேனை எடுத்துக்கொண்டு கிளம்பினேன், வேண்டாம் விறகு வாங்கிகொள்ளலாம் என்றார்கள், கேட்காமல் ஒரு கையில் மன்ணெணைய் கேனை பிடித்துக்கொண்டு ரேசன் கடையை நோக்கி ஒரு கையில் சைக்கிளை ஓட்டிக்கொண்டு சற்று மேடான பேருந்து செல்லும் சாலையை தொட்டு ஒட்டிவந்தேன், கொஞ்சம் சிரமப்பட்டு ஓட்டிக்கொண்டிருந்தேன். எதிரே ஒரு பேருந்து வந்துகொண்டிருக்க பின்னாலும் ஒரு பேருந்து குறுகலான சாலையில் எதிரெதிரே வாகணங்கள் விலகி செல்ல நான் சைக்கிளை கீழே இறக்கவேண்டிய நிர்பந்தம். என்னை தாண்டிக்கொண்டிருந்த பேருந்து என்னை விலக விலக சைக்கிளை சற்று கட்டுபடுத்தமுடியாமல் நான் கீழே இறக்க முயற்சிக்கும் வேளையில் ஒரு கையில் பிடித்துக்கொண்டிருந்த மன்ணெண்னை கேன் பேருந்தில் லேசாக மோதியதும் நான் புதிதாக போடப்பட்டிருந்த சாலையில் கீழே பலமாக மோதி விழுந்தேன். நான் மண்டைதான் உடைந்துவிட்டது என்று நினைத்துகொண்டிருக்க கையிலிருந்து சதைகிழிந்து கொட்டியது இரத்தம். பிரேக் கையை குத்தி கிழித்திருந்தது, எதிரே டீ கடையில் டீ குடித்துக்கொண்டிருந்த தீயணைப்பு துறையை சேர்ந்தவர் ஓடி வந்து தூக்கிகொண்டே கேட்டார் எப்படி நடந்தது என்று நான் பஸ்ல இடிச்சி விழுந்துட்டேன் பிரேக்கு கையை கிழிச்சிருச்சி என்றேன். டே உன்னை இடிச்சிபுட்டு பஸ்சுகாரனே நிறுத்திகிட்டாண்டா பஸ்சு கிழிச்சிருச்சின்னு சொல்லு என்றார், சட்டென ஒளிப்பிறந்தது, உடனே அவர் என்னை தூக்கிகொண்டே பேருந்தின் அருகில் போக பேருந்து நடத்துனர் 20 ரூபாயை கொடுத்து டாக்டர்கிட்ட போய் பாத்துகிட்டு போடா என்றார். மக்கள் கூட்டம் கூடிவிட யோவ் என்னய்யா இருவது ரூவா குடுக்குற பையனுக்கு ஏதாச்சும் ஆயிருந்தா? நிறுத்துடா வண்டிய பையன மொதல்ல ஆஸ்பத்திரிக்கு கூட்டிகிட்டு போ என்றனர், அவனா வந்து மாட்டிகிட்டான், இதுகெல்லாம் நான் ஆஸ்பத்திரிக்கு கூட்டிகிட்டு போகமுடியுமா? டிரிப்பு லேட்டாகுது, தம்பி பக்கத்துலதான் ஆஸ்பத்திரி போய் பாத்துக்கிட்டு போடா என்றவன் மனதில் பேருந்து கிழித்துதான் காயம் ஆகியிருக்கிறது என்ற எண்ணம் இருந்தது. ஆனால் அங்கிருந்த கூட்டத்தில் எங்கள் வீட்டிற்கு அருகே வசிக்கும் ஒரு கொத்தனார் இருந்தார், அவரோ நமக்கு தெரிஞ்ச பையன் தான் நம்ப ஆர்.சி.பிளாண்டுக்கு வேலைக்கு போறாரே மாரியண்ணன் இல்ல அவிங்க பையன் தான் என்றதும் கூட்டம் அட நம்ப மாரியண்ணமுட்டு பையனா என்று அட அந்த பஸ்சுகாரன உட்ராதிங்கப்பா பாத்தியா பையன்கிட்ட இருவது ரூவாய குடுத்துட்டு ஓட பாக்குறான் என்று ஆளாளாளுக்கு நடத்துனரை மொய்க்க தொடங்கினர். ஏங்க ஓணரு என்ன திட்டுவாருங்க பையன் மேல தாங்க தப்பு என்று நடத்துனர் புலம்பிகொண்டிருக்க அவிங்க அப்பா வர்ற வரிக்கும் பஸ்ச உட்றாதிங்கப்பா என்று சொல்லிவிட்டு கொத்தனார் தனது சில்வர் பிளசில் எங்கள் வீட்டை நோக்கி புறப்பட்டிருந்தார், அதற்குள் எதிரே இருந்த ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுவிட்டேன். நடத்துனரும் நடந்த விவரத்தை பேருந்து உரிமையாளரிடம் சொல்லிவிட்டார். சிறிது நேரத்தில் அப்பா அம்மா, சித்தி, சித்தப்பா என அனைவரும் வந்திருந்தனர். ஏண்டா பையன்கிட்ட இருவது ரூவா குடுத்து பாத்துக்கிட்டு போக சொன்னியாமே உசுருக்கு ஏதாச்சும் ஆயிருந்தா என்று கையை ஓங்க நடத்துனர் மன்னிப்பு கேட்டுக்கொண்டு அமைதியாக நின்றிருந்தார். காயம் ஆழமாக இருந்ததால் தையல் போடவேண்டும் பெற்றோர் வரட்டும் என காத்திருந்த மருத்துவர் என் தந்தையிடம் ஆலோசித்துவிட்டு ட வடிவத்தில் கிழிந்திருந்த காயத்தில் பக்கவாட்டில் கிழிந்திருந்த பகுதியை மட்டும் தைக்கலாம் என்று முடிவு செய்து மயக்க மருந்து கொடுத்தனர். தையல் போட்டால் தழும்பு மறையாதாம். ஆனால் தையல் போடாத இடத்திலுள்ள தழும்பும் மறையவில்லை. இப்போதும் நான் கொடுக்கும் அடையாளம் வலது முன்கையில் பெரிய தழும்பு என்பதுதான் எனது இரண்டாவது அடையாளம். மயக்கம் தெளிந்து பார்க்க கை வலியெடுக்க ஆரம்பித்து அழுதுகொண்டிருக்க என் அம்மாவும் அழுதுகொண்டிருந்தார். பேருந்து நிறுத்தப்பட்டது நிறுத்தப்பட்டதுதான், சுமார் மூன்று மணி நேரத்தில் சேறு படிந்த வேட்டியுடன் தன் தோட்டத்திலிருந்து ஆம்னியில் வந்தார் ஸ்ரீ பாலாஜி டிராண்ஸ்போர்ட் உரிமையாளர், வந்ததும் தனது நடத்துனரை ஏண்டா அறிவில்ல அடிபட்டதும் பையன ஆஸ்பத்திரியில சேர்த்திருக்கனுமில்ல இருவது ரூவா எதுக்குடா குடுத்த நாயி என்று காரணமறிந்து திட்டியவர் அண்ணா ஏற்கனவே ரெண்டு சிங்கிள் வீனாய்போச்சுங்கண்ணா பையனுக்கு எந்த பிரச்சனையா இருந்தாலும் நான் பாத்துக்குறேன் வண்டி போகட்டுங்கண்ணா என்றார் பக்குவமாக உடனே வண்டி விடுவிக்கப்பட்டது. எனக்குகூட வண்டி நிறுத்தப்பட்டது கொஞ்சம் ஓவராக தெரிந்தது, ஆனால் சிலர் பேச தெரியாமல் பேசி காரியத்தை கெடுத்துகொண்டால் இந்த நிலைமைதான். தனது ஆம்னியில் அழைத்துக்கொண்டு மேட்டூரில் உள்ள சற்று வசதியான மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர் அங்கு கையை எக்ஸ்ரே எடுத்து பார்த்ததில் எலும்பு முறிவு ஏதுமில்லை என்று உறுதி செய்யப்பட்டது, பின்னர் எங்களை வீட்டில் விட்டுவிட்டு புறப்பட்டார் பேருந்து உரிமையாளர், அவருக்கு மொத்தமாகவே முன்னூறு ரூபாய்க்குள் தான் செலவு. தவறு முற்றிலும் என் மீதுதான் ஆனால் பொது இடத்தில் நடந்த விபத்தால் விசயம் பெரிதாகிவிட்டது, காயம் சற்று ஆழமானது ஒரு காரணம் நடத்துனரின் பொறுப்பற்ற பேச்சும் மக்களின் உள்ளூர் அனுதாபமும் விவகாரமாகிவிட்டது.

ஒருமுறை கையை ஒடித்துக்கொண்டதோடு இருக்கவில்லை, 9ம் வகுப்பு படிக்கும்போது மதிய உணவு இடைவேளையில் கால்பந்து விளையாடி ஒருவர் காலில் ஒருவர் மாட்டி கீழே விழுந்து ஏற்கனவே ஒடிந்த கையின் மூட்டு விலகிவிட்டது. உடைந்த கை உடையாமல் மூட்டு விலகியிருக்கிறது என்றால் நல்லாம்பட்டி கட்டு எவ்வளவு உறுதியாக கையை பொறுத்தியிருக்கும்? பாருங்கள். ஆனால் இந்த முறை கை உடைந்தபோது அவ்வளவாக வீட்டிலிருந்து அக்கறையில்லை, அடிக்கடி இப்படி பொறுப்பில்லாமல் பிரச்சனைகளை கொண்டு வருவதும் சற்று வளர்ந்துவிட்டேன் என்ற காரணமாகவும் இருக்கலாம். சுமார் 7 அல்லது 8 வயது இருக்கும் போது ஒரு தீபாவளியின் போது மரத்திலேறி வழுக்கி விழுந்து கால்முட்டிக்கு கீழே பெரிய காயத்துடன் திட்டு வாங்கிகொண்டிருந்தவன் என் பெரியப்பாவிட்டிலிருந்து வெடிக்காத பட்டாசுகளை பொறுக்கி வந்து எங்கள் அடுப்பில் போட்டது தான் வினை ஒரு பட்டாசு கண்ணிலேயே சீரியடித்தது இப்போது நினைத்தாலும் கண்கள் கலங்குகின்றன. ஒரு வாரம் கண்ணில் தண்ணீர் நிற்கவில்லை, கண் எரிச்சலும் தாங்கமுடியவில்லை. ஆனால யாரும் மருத்துவமனைக்கு அழைத்து செல்லவில்லை இப்போதுகூட அந்த வேதனையும் எரிச்சலும் மறக்கமுடியவில்லை. சில நேரம் நமக்கு பெற்றோரின் அலட்சியம் இவர்களுக்கு நம் மீது என்ன பற்று இருக்கிறது என்ற கேள்வியை எழுப்புகிறது. சிறு பிள்ளை தவறு செய்வது அறியாமை அல்லது ஆவல் ஆனால் கண் போய்விட்டால் என்ன செய்வது, இந்த விசயத்தில் அலட்சியம் காட்டிவிட்டார்கள், ஆனால் நல்லவேளையாக கண் பிரச்சனை நாள்பட சரியாகிவிட்டது. ஆனால் வயதாகும் போதுதான் தெரியும் விளைவு.

இடப்பெயர்வு..........

6ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன் எனது பெரியப்பாவிற்கும், சித்தப்பாவிற்கும் வேலை போய் மீண்டும் அண்ணன் தம்பிகளின் பிரச்சனை தலைதூக்கியது। ஒரு நாள் மாலை கடைசி சித்தப்பன் குடித்துவிட்டு வந்து தனக்கு வேலையில் சேர ரூ10,000 பணம் தேவை என சண்டையிட, ஏற்கனவே தான் கொடுத்த பத்தாயிரத்தை பெற்றுக்கொண்டு பாகம் பிரித்துக்கொடுக்காத நிலையில் சம்பந்தமில்லாமல் தான் எதற்கு பணம் தரவேண்டும் என்று கூறிவிட, தன் தேவை பூர்த்தி செய்யப்படாத எரிச்சலில் பேசிக்கொண்டிருந்தவனை சட்டென எழுந்து பலரும் தடுத்து கேட்காமல் என் தந்தை நெஞ்சில் உதைத்ததுதான் மல்லாந்து விழுந்தவரை கொண்றுவிட்டதாக அங்கு ஒரு ஒப்பாரி பாட எங்கள் வீட்டில் ஒரு பயம் தொற்றிக்கொண்டது, இந்த பிரச்சனை எதுவரை போகுமோ என்று। அடுத்த நாள் என் பெரியப்பா தன் வீட்டை விற்கப்போவதாகவும் அதை என் தந்தை வைத்துக்கொள்ளவேண்டும் என நிர்பந்தப்படுத்தப்பட இதில் உடன்பாடில்லாத என் தந்தை தான் வாழ்ந்த அந்த கூரையையும் காலி செய்யும் முடிவுக்கு வந்துவிட்டார். என்னிடம் கேட்டதற்கு அந்த கிராமத்தை விட்டு பிரிய மணமில்லையென்றாலும், அங்கு நிலவிய சூழ்நிலை பதற்றமாகவே இருந்ததால் நானும் போகலாம் என்று கூறிவிட்டேன். என் மாமவிற்காக நாங்கள் நகரப்பகுதியில் வாங்கி வைத்திருந்த இடத்தில் ஒரு கூரை போட்டுக்கொண்டு போய்விடலாம் என்ற எண்ணம் என் தாய்க்கு கூட கடைசி வரை தெரியாது. அண்மையில் போடப்பட்ட கூரையை ஏன் பிரிக்கிறார்கள் என்ற காரணம் புரியாமல் சிலர் கேட்கவே தான் குடிபெயரும் விசயமே என் தாய்க்கு தெரியும். ஆனால் மதியம் வரை கிணற்றின் அருகே துவைத்துக்கொண்டிருந்தவளுக்கு சரக்குந்து வந்தபின் தான் இனி இந்த கிராம வாழ்க்கை முற்று பெற்றதாக நினைத்து இருப்பாள். ஆனால் அந்த நகர்புறத்தின் கடைசியிலிருந்த நாண்கு ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து மாடு வளர்க்கப்போகிறோம் என்பது யாருக்கும் தெரியாது. கூரை வேண்டாம், ஓடு போடலாம் என நினைத்து, ஓடு போடுவதற்கு இரண்டு அறை கொண்ட மெத்தை வீடு கட்டலாம் என்ற எண்ணத்திற்கு வந்து கடைசியில் கட்டியதோ மாட்டிற்கும் சேர்த்து எட்டு அறைகள் கொண்ட மெத்தைவீடு. 1986-87ல் கட்டப்பட்ட வீட்டிற்கு ஆன செலவு ரூபாய் 84,000 இன்றைய மதிப்பு சுமார் 8,00,000. இருட்டு கூரையில் அடுப்பு வெளிச்சத்திலும், மண்ணென்னை விளக்கின் வெளிச்சத்திலும் படித்த காலம் மாறி சட்டென மின்சார ஒளி வந்தது.

முன்னேற்றம்......

நான் எவ்வளவு உழைத்தேனோ அதற்கு ஏற்றவாறு ஒரு சிந்தனையாளனாகவே வளர்ந்துள்ளேன்। என் தந்தை என்னை தோள்மேல் வைத்துக்கொண்டு மாடு மேய்த்த காலத்திலிருந்தே ஏன்? எதற்கு? என்ற கேள்விகளை கேட்டு வளர்ந்தேன். எனக்கு விடை கிடைக்வில்லையே என்பதற்காக நான் கேள்வியை விட்டுவிடவில்லை ஏதோ ஒரு நினைவு மூளையில் தான் புதைக்கிறேன், மீண்டும் அந்த கேள்விக்கு விடைகானும் வரை என் தேடல் தொடரும், விடை கிடைத்த போதெல்லாம் ஒரு துனை கேள்வியோ, சந்தேகமோ தான் மிஞ்சியது, இந்த கேள்வியும் அதற்கான தேடலுமே எனக்கான அடையாளத்தை ஏற்படுத்திகொடுத்துள்ளது. ஓர் ஐயர் வீட்டில் பால் கொடுத்து வந்தோம், ஆரம்பத்தில் வெளியே நிறுத்தி பால் வாங்கியவர்கள் பின் நான் எங்கள் கிணற்றில் மீன் பிடிப்பதை தெரிந்து அவர்கள் தொட்டியில் விட மீன் கேட்டார்கள். பின் நான் ஒரு துரு துரு ஆசாமி என்பதால் முருங்கைகாய் பறிக்கச்சொல்வது என்று சின்ன சின்ன வேலை சொன்னவர்களின் வீட்டின் அடுப்பறை வரை செல்லும் அளவிற்கு அனுமதிக்கப்பட்டேன். அவர்கள் குழந்தைகளை எடுத்து விளையாடுவது என்று எனக்கு அவர்கள் வீட்டில் எந்த தடையும் இருந்ததில்லை, ஆனால் நான் கல்லூரியில் படிக்கும்போது அதுவும் கணிப்பான் படிப்பதெல்லாம் பி.காம், சி.ஏ படித்து அசிஸ்டெண்ட் அக்கவுண்ட்ஸ் ஆபிசராக வேலை பார்த்த அவர்களின் மகனுக்கே தெரியாது என்பதால் என்னை சற்று பொறாமையுடன் பார்ப்பது எனக்கு கொஞ்சம் பெருமிதமாகவும், சற்று சீக்கிரமே அங்கிருந்து கிளம்பிவிடும் அவசரத்தையும் ஏற்படுத்தும்.

புலிகளைப்பற்றிய முதல் அறிவு................

ஒரு பொங்கலின் போது என் அத்தையுடன் சாமி கும்பிட போய்விட்டேன் என்பதற்காக 4 வயதில் நான் வாங்கிய அடி இன்றும் என் பாட்டி வீட்டுப்பக்கமே போவதில்லை, அன்று வாங்கிய அடியால் வந்த புன்களில் மொக்கும் ஈக்களை ஓட்டவே எனக்கு பள்ளிக்கூடத்தில் நேரம் சரியாக இருந்த்து. சற்று கவனக்குறைவாக இருந்தால் ஈக்கள் புன்னை குடையும் வலி இருக்கிறதே அது அனுபவித்தால் தான் தெரியும், என்னதான் விரட்டினாலும் மீண்டும் மீண்டும் உயிரை வாங்கும். வருடத்தின் 365 நாளும் கால் கைகளில் புன் இல்லாத நாளே இல்லை. ஏழாம் வகுப்பு வரை நடத்த அந்த பள்ளிக்கு அனுமதியில்லை, ஆனால் நடத்திக்கொண்டு இருந்தார்கள். ஒரு வழியாக ஏழாம் வகுப்பு முடித்தவுடன் 8 ம் வகுப்பு மேட்டூர் அரசினர் மேல்நலைப்பள்ளியில் சேர்க்கப்பட்டேன். நான் அறிந்திருக்காத குதிரை ஜில்லி, அது இது ஏதேதோ விளையாட்டுக்களை அங்கு விளையாடுவதுதான் வேலை, படிப்பு என்பதெல்லாம் எப்போதாவது நடக்கும் விசயம். அங்கு எனக்கு நிறைய நண்பர்கள் கிடைத்தாலும் ஏனோ அந்தப் பள்ளிக்கூடம் எனக்கு பிடித்திருக்கவில்லை. மிகவும் கண்டிப்பான உடற்கல்வி ஆசிரியர்கள், மேலும் அங்கு தரையில் அமர்ந்துதான் படிக்கவேண்டும். அழுக்கான தரையில் அமர்வதால் அடிக்கடி உட்காரும் இடத்தில் வேர்வையால் அரிக்க ஆரம்பித்துவிடும் இதுவே பெரிய எரிச்சலாக இருக்கும். அதுவரை அதிகம் மண்ணில் விளையாடி பழகாதவன் அந்த பள்ளியில் ஆட்டம் போட்டுக்கொண்டிருந்தேன். அப்போது ஒருநாள் பேருந்தில் நக்கீரன் படித்துக்கொண்டிருந்த ஒருவரிடம் முதல்முறையாக ஆர்வத்துடன் ஆவலுடன் வாங்கி படித்தேன் அதுவரை நாளிதழோ, வார இதழ்களையோ படித்ததே இல்லை. ஒரே ஒரு முறை 1984ல் இந்திராகாந்தி சுட்டுக்கொல்லப்பட்டபோது ஒரு தினத்தந்தியை படிக்கச்சொல்லி கொடுத்தார்கள். 1989 ம் ஆண்டு அந்த நக்கீரனில் வெளியாகி இருந்த விடுதலைப்புலிகளின் ஈழ விடுதலை போராட்டம் சம்பந்தமான ஒரு கட்டுரையை படித்தவனுக்கு அப்போது வரலாற்று ரீதியாக அவ்வள்வு அறிவு இல்லாவிட்டாலும் அவர்கள் கொடுமைக்கு எதிராக ஆயுதமேந்திய போராளிகள் என்பதை புரிந்துகொண்டேன். அப்போது தான் இலங்கை என்ற நாட்டிலும் தமிழ் மக்கள் வாழ்கிறார்கள் என்பது எனக்கு தெரியவந்தது. அடுத்த நாள் என் பள்ளிக்கு வெளியே உள்ள கடையில் சைக்கிளில் ஒட்டப்படும் பாயும் புலி படம் ஒன்றை 50 பைசாவிற்கு வாங்கி எனது வரைகருவி பெட்டி(Geometry Box)ல் ஒட்டினேன். அது முதல் எனக்குள் எதோ ஒரு புதிய இரத்தம் பாய்ந்துவிட்டது போல் ஒரு உணர்வு, நான் பல்கலைகழகத்தில் படித்து முடித்த நிலையில் கூட அந்த வரைகருவி பெட்டியை பத்திரமாக வைத்திருந்தேன் ஆனால் சமீபத்தில் கானாமல் போய்விட்டது. விசாரித்ததில் என் தம்பி தன் 6ம் வகுப்பு காதலிக்கு பரிசாக கொடுத்துவிட்டானாம். நான் 6ம் வகுப்பில் படிக்கும்போது காதல் என்ற வார்த்தையையே கேள்விபட்டதில்லை. லவ்வு, கூட்டிக்கிட்டு ஓடிபோயிருச்சிங்களாம் என்றுதான் ஊரில் பேசுவார்கள், அப்போதுஅது எனக்கும் எதோ கொலைகுற்றம் போலத்தான் தோன்றியது. அதற்கு முன் 1987 ல் பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டதாக பரவிய வதந்தியால் கண்டன வாசகங்கள் தாரில் பேருந்துகளில் எழுதியிருந்ததை படித்து யாரிந்த பிரபாகரன் என்று புரியாமல் தினம் தினம் அதை எல்லா பேருந்திலும் படித்துக்கொண்டிருந்தேன். பின்னர் அதே பேருந்துகளில் "பிரபாகரன் கொல்லப்படவில்லை, பிரபாகரன் வாழ்க" என்ற வாசகங்கள் எழுதப்பட்டிருந்ததை புரியாமல் குழம்பிக்கொண்டிருந்தேன். 8 ம் வகுப்பு படிக்கும்போது மேட்டூரில் கானப்படும் பெரியாரின் பொன்மொழிகளால் நான் அவ்வள்வாக ஈர்க்கப்படவில்லை, காரணம் பள்ளிக்கூடம் முடிந்ததும் உடனே வீடு வந்துவிடவேண்டும் என்பது பெற்றோர் உத்தரவு.

No comments: